December 10, 2018
தண்டோரா குழு
இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக் லண்டனுக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுச்செல்ல தடை இல்லை என லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச்செலுத்தவில்லை என அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, இங்கிலாந்திற்கு தப்பிய விஜய் மல்லையாவை கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியது. அதைபோல் விஜய் மல்லையாவைக் கைதுசெய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவியையும் இந்திய அரசு கோரியிருந்தது.
இதற்கிடையில் மல்லையாவை இந்தியா அழைத்து வருவது தொடர்பான வழக்கு இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தீர்ப்பு வெளிவரும் நிலையில் மல்லையா தீடீர் என தன் ட்விட்டர் பதிவில் “நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றை நான் சட்டப்பூா்வமாக நான் சந்தித்துக் கொள்கிறேன். ஆனால் நான் பெற்ற கடனை முழுவதுமாக செலுத்திவிடுகிறேன். இதனை இந்திய அரசும், வங்கிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பரபரப்பான இந்த வழக்கில் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க எந்த தடையும் இல்லை என மல்லையாவை நாடு கடத்த நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முடிவெடுக்க இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இந்த தீர்ப்பின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.