February 11, 2021
தண்டோரா குழு
கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடி மதிப்பில் நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 95 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம்,எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.48 கோடி ரூபாய்க்கு வாலாங்குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை திருச்சி சாலையில் இருந்து சுங்கம் பைபாஸ் செல்லும் சாலையில் உள்ள வாலாங்குளம் பகுதியில் சிறுவர்கள் விளையாட ‘பிளேயிங் ஜோன்’ பணிகள், சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி, நடைபயிற்சி தளம், தண்ணீரில் மதந்து இருக்கும் மிதவை பாலம் போன்றவை 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சுங்கம் பைபாஸ் பாலம் கீழ் பகுதியில் வாலாங்குளம் கரைப்பகுதியில் உணவகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. வாலாங்குளம் தண்ணீரில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியும் நிறைவடைந்துள்ளது. வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 95சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.