December 14, 2018
தண்டோரா குழு
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட கேரள மாநில பெண்ணியவாதி ரெஹானா ஃபாத்திமாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 19-ம் தேதி மாலையணிந்து கேரளாவில் சபரிமலை சன்னிதானம் வரை செல்ல முயன்ற பெண் செயல்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா, கடும் எதிர்ப்பால் திரும்பினார். ஐயப்ப பக்தர் போன்ற தோற்றத்தில் ரெஹானா ஃபாத்திமா, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பேஸ்புக்கில் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார். அதில், சபரிமலை சன்னிதான வாசலில் எழுதப்பட்டிருக்கும் ‘தத்வமசி ’ என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார்.
‘நீ, எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்’ என்பது அதன் பொருள். அவர் பதிவிட்ட கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர், கடந்த மாதம் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல்.,ல் டெலிகாம் டெக்னிசியனாக பணியாற்றி வந்த ரெஹானா, பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு பத்தனம்திட்டா மாஜிட்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், பம்பை காவல் மாவட்ட எல்லைக்குள் ரெஹானா ஃபாத்திமா செல்லக் கூடாது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.