September 24, 2020
தண்டோரா குழு
கோயமுத்தூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தினம் 24.09.2020 அன்று கொண்டாடப்பட்டது. அத்தினத்தை முன்னிட்டு இக்கல்லூரியின் என்.எஸ்.எஸ். சார்பில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைக் கருத்தரங்கம் ஒன்று இணையவழியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக செல்வி. பூர்ண சுந்தரி IAS கலந்து கொண்டு சிறப்பித்தார்.மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுச்சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்தரங்கில் இவர் பேசும்போது,
மாற்றுத்திறனாளியான தான் இச்சாதனையினைச் செய்ய நாட்டு நலப்பணித்திட்ட மாணவியாக இருந்ததே மிக முக்கியக் காரணம் என்று கூறியதோடு விவேகானந்தர்,காமராசர்,அப்துல்கலாம் ஆகியோரை மாணவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நேரத்தை முறையாகப் பயன்படுத்தி, சமூக பொறுப்புடன் செயல்பாட்டால் தங்கள் வாழ்க்கையில் வரலாறு படைப்பதோடு,வலிமையான தேசத்தையும் அவர்களால் உருவாக்க முடியும் என்று உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் கூறினார்.
இந்நிகழ்வில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை வரவேற்புரை நல்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் & செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பிரகதீஷ்வரன், சுபாஷினி, நாகராஜ் ஆகியோர் இந்நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.