March 18, 2019
தண்டோரா குழு
கணைய புற்று நோயால் உயிரிழந்த, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் இன்று மிராமர் கடற்கரையில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கோவா முதலமைச்சரான மனோகர் பாரிக்கர், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தலைநகர் பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரிக்கரின் உடல், பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, கலா அகாதமிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் திரண்டு, மனோகர் பாரிக்கருக்கு அஞ்சலி செலுத்தினர். பிற்பகலில் அங்கு சென்ற பிரதமர் மோடி மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
பாதுகாப்புத்துறை நிர்மலா சீத்தாராமனும், மனோகர் பாரிக்கருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார். பாரிக்கரின் சடலத்தைப் பார்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்ணீர் வடித்தார். மாலை 5 மணி அளவில் பாரிக்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மிராமர் கடற்கரை கொண்டு செல்லப்பட்ட மனோகர் பாரிக்கரின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உடல் தகனம் செய்யப்பட்டது.