December 17, 2018
தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக் கொண்டார்.
5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.
இதனால் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதற்கிடையே சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட்டும், துணை முதல்வர் பதவிக்கு சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக் கொண்டார். அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் கல்யாண்சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதைப்போல், துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பொறுப்பேற்றார்.
மேலும், பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், தி.மு.க தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.