November 23, 2018
தண்டோரா குழு
கஜா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கக்கோரி ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைத்துள்ளன, மேலும் 88,102 ஹெக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு என தகவல் தெரிவிக்கின்றது. 12 மாவட்டங்களில் 32,707 ஹெக்டேர் நெல், 30,100 ஹெக்டேர் தென்னை, 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் புயல் பாதித்த பகுதிகளுக்கு தமிழக அரசு அறிவித்தபடி, தமிழக அரசு பேருந்துகளில் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் ரயில் மூலம் அனுப்பப்பட்டும் வருகிறது,
இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரயிலில் அனுப்பப்படும் பொருட்களுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய கடிதத்தில்,
“சமீபத்தில் ஏற்ப்பட்ட ‘கஜா’ புயலால் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 4 கடலோர மாவட்டங்கள் முழுமையாகவும், மற்ற மாவட்டங்கள் அதிகளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்டோர் இப்புயலால் உயிரிழந்தனர். மக்கள் தங்களது வீடுகள், வாழ்வாதாரங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. ஆகவே, ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என ரயில்வே துறையை வலியுறுத்துகிறேன். கேரள மழை வெள்ளத்தின் போதும் இதேபோன்ற நடவடிக்கையை ரயில்வே துறை மேற்கொண்டதை சுட்டிக்காட்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.