January 4, 2019
தண்டோரா குழு
ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு என குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில். பாராளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க விருப்பம் கிடையாது, அவர்கள் எதுவும் செய்யவில்லை. விமானங்கள் ஒன்றும் அலமாரியில் இல்லை. அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க விரும்பம் கிடையாது, எதுவும் செய்யவில்லை. ரபேல் முதல் போர்விமானம் 2019 -22 க்குள் 3 ஆண்டுகளில் வந்து விடும். வரும் செப்., முதல் ரபேல் உற்பத்தி துவங்கும். 36 விமானங்களும் வரும் 2022 க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.
ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே எங்களுடைய முன்னுரிமை, அண்டைய நாடுகள் போர் யுக்திகளை அதிகரித்து வரும் வேளையில் இந்தியாவும் ஆயுத தளவாடங்கள் வாங்குவதற்கு முக்கியத்துவம் அளித்தது. காங்., அரசு இதனை சரியாக செய்யவில்லை.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரபேல் வாங்காமல் இழுத்தடித்தது ஏன்? 2001ல் வாஜ்பாய் அரசுதான் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் அக்கறை கொள்ளவில்லை. கடந்த 2005 முதல் 2015 வரை சீனா 400 ராணுவ விமானங்கள் வாங்கியுள்ளன. இந்த நிலையில் நாமும் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நிர்ணயித்த விலையை விட ரபேல் விமானம் 9சதவீத விலை குறைத்து வாங்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் தவறான தகவலை அளிக்கிறது.
இவ்வாறு அமைச்சர் நிர்மலா பேசினார்.