July 30, 2020
தண்டோரா குழு
கோவையில் சிலர் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறி வாலிபர் ஒருவர் ரத்தம் சொட்டச்சொட்ட கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ராஜரத்தினம்.இவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது மனைவி உயிரிழந்துவிடவே மனமுடைந்த ராஜரத்தினம் கோவையிலேயே சாலையில் தங்கி வந்துள்ளார்.இந்த சூழலில்,கோவை வாலாங்குளம் பகுதிக்கு சென்று மீன் பிடித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்த அவர், இன்று காலை அங்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு இருந்தவர்களுக்கும் ராஜரத்தினத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ராஜனத்தினம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து முகம் மற்றும் கை, கால்களில் ரத்தம் சொட்டச்சொட்ட கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ராஜரத்தினம் அங்கு தனக்கு நீதிவேண்டும் என்று கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ராஜரத்தினத்திடம் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.