December 17, 2018
தண்டோரா குழு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ரஜினி2.0 உள்ளிட்ட 140 வகைகளில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை தினத்தை முன்னிட்டு புத்தாடைகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஸ்துமஸ் என்றாலே பிரதானமாகக் கருதப்படும் கேக்குகள் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிளம் கேக், கிரீம் கேக், கட்டிங் கேக் போன்றவை பல்வேறு வடிவங்களில் விற்பனைக்காக வந்துள்ளன.
கோவை கே.ஆர்.எஸ். பேக்கரியில் இந்த ஆண்டின் புதுவரவாக பார்பிடால், மத்தளம், டிரம்செட் மற்றுக் சிட்டி 2.0 வடிவிலான கேக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டைப் போல சாக்லெட் கிறிஸ்துமஸ் மரம், சாக்லெட் குடைகள், சாக்லெட் கிறிஸ்துமஸ் தாத்தாக்களுடன் கூடிய கேக்குகள் குழந்தைகளைக் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பைபிள், வீடு, மிக்கிமோஸ், சோட்டாபீம் உள்ளிட்ட கார்ட்டூன் வடிவங்களிலும் கேக்குகள் உள்ளன.
ப்ரஷ் கிரீம் கேக்குகளுக்கு கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் வரவேற்பு அதிகரித்திருப்பதாக கேக் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும்,கிறிஸ்துமஸ் கேக்குகளில் வண்ணங்கள்,மாடல்கள் மட்டுமன்றி ஆரஞ்சு, அன்னாசிப்பழம்,ஆப்பிள்,சாக்லெட் சுவைகள் மிகுந்த கேக்குகளை மக்கள் கேட்டு வாங்குகிறார்கள். வாழைப்பழச் சுவையுடன் தயாரிக்கப்படும் கேக்குகளை முதியவர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ப்ரஷ் கிரீம் கேக்குகள் இந்த ஆண்டில் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. இவை பிற கேக்குகளை விட மிகவும் மென்மையானதாகவும், இனிப்புச் சுவை குறைந்ததாகவும் உள்ளது. பிளம் கேக்குகள் 200, 400 கிராம், 1 கிலோ அளவில் தனித்தனி பாக்ஸ்களாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மொத்த கேக்குகள் கிலோ ரூ.250 முதல் ரூ.400 வரை அதில் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகளுக்குத் தகுந்தாற்போல விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு கேக்குகளை வாங்கிச் செல்வதாகதாகவும் அவர்கள் கூறினர்.