March 14, 2019 தண்டோரா குழு
பிரதமர் மோடியை குறித்து முன்னாள் நடிகையும், கர்நாடக காங்கிரஸ் உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா பதிவிட்ட ட்வீட் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ரம்யா. கடந்த 2003ம் ஆண்டில் நடிகர் சிலம்பரசனுடன் ‘குத்து’ படத்தில் இவர் இணைந்து நடித்திருந்தார். திரைத்துறையில் பிரபலமாக விளங்கிய ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.
மோடியை விமர்சிப்பதும், அந்த விமர்சனத்தால் சர்ச்சையில் சிக்குவதும், பின் கட்சி மேலிடத்தால் கண்டிக்கப்படுவதும் திவ்யாவிற்கு புதிதல்ல. பல முறை சர்ச்சைக்குரிய டுவீட் செய்துள்ள திவ்யா தற்போது மோடியின் ஆதரவாளர்கள் முட்டாள்கள் என கூறும் மீம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில்,பிரதமர் மோடியின் புகைப்படத்தின் மீது “உங்களுக்குத் தெரியுமா? மோடியின் ஆதரவாளர்களில் மூவரில் ஒருவர் முட்டாள்கள்.. மற்ற இருவரைப் போலவே” என எழுதி பதிவிட்டதோடு இவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்! மகிழ்ச்சிகரமானது அல்லவா? என அந்தப் படத்திற்கு தலைப்பிட்டிருக்கிறார்.
இந்த டுவீட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ட்விட்டரில் மிகப்பெரிய மோதலை உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் மற்றவர்களை தாக்கி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.