February 6, 2021
தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வாலிபர் முழுமையாக எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
மேட்டுப்பாளையம் ஓடந்துறை கிராமம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் (39) அவர் நேற்று இரவு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று எரிந்து நிலையில் கிடப்பதாக கூறினார். இதை அடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் சம்ஸ் போர்டு என்ற தனியாருக்கு சொந்தமான கல்லாறு சோதனைச்சாவடி அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கிடந்த அந்த ஆண் சடலத்தை சென்று பார்த்தனர். அப்பொழுது அந்த ஆண் சடலம் ஒரு கால் தவிர உடல் முழுவதும் முழுமையாக கருகி போயிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.இதன் அடிப்படையில் போலீசார் இன்று விசாரணையை துவங்கியுள்ளனர்.
காட்டுப்பகுதிக்குள் எரிந்து கிடந்தவர் யார்? அவரை திட்டமிட்டு யாரும் எரித்துக் கொலை செய்தார்களா? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்கின்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.