June 29, 2019
தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து வந்த காதல் ஜோடியை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் காதலன் கனகராஜ் ஏற்கனவே இறந்து விட்டநிலையில், சிகிச்சைபெற்று வந்த வர்சினிப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி என்பவரது மகன்கள் கனகராஜ் மற்றும் வினோத். கனகராஜ் உருளைக்கிழங்கு மார்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்ஷினி பிரியா என்ற வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இதனிடையே காதலித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இரு வீட்டாரும்,வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்து வைத்துள்ளனர்.ஆனால் இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து இரு வீட்டார் தரப்பிலும் கண்டித்து இருவரையும் பலமுறை கண்டித்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கனகராஜின் தந்தை இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரையும் வெள்ளிப்பாளையம் அருகே ஸ்ரீரங்கராயன் பகுதியிலேயே வேறு இடத்தில் தங்கவைத்துள்ளார். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்(25-06-2019) அன்று மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத் வேற்று சமூகப்பெண்ணை திருமணம் செய்ய கூடாது என தம்பி கனகராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து,கை மற்றும் தலை பகுதியில் பலத்த வெட்டுபட்ட கனகராஜ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வர்ஷினி பிரியாவையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
இதுகுறித்து சம்பவம் இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட எஸ்.பி சுஜீத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மேட்டுப்பாளையம் போலீசார் இக்கொலைக்கு காரணமான குற்றவாளி வினோத் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனயடுத்து இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த காதலி வர்சினிப்பிரியா சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கந்தவேலு, சின்ராஜ் உள்பட மூன்று பேரை கைது செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்.