February 18, 2019
தண்டோரா குழு
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார இரு சக்கர வாகனங்களை வோகோ என்கிற தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து சோதனை முறையில் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. அதன்படி, ஆலந்தூர், கிண்டி, வடபழனி மற்றும் அண்ணா நகர் டவர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில், இந்த மின்சார இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன.இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் பயணிகள் தங்களது மொபைல் போனில், வோகோ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பின்பு அதில் தங்களது ஓட்டுநர் உரிமத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த விவரங்களை சரிபார்க்கப்பட்ட பின்னர், பயணிகள் இருசக்கர வாகனங்களை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்ற அளவில் வசூலிக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வெற்றி பெற்றால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்கனவே வாடகை சைக்கிள் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்நிலையில் தற்போது சோதனை முறையில் மின்சார இருசக்கர வாகன வசதியும் தொடங்கப்படவுள்ளது.