December 17, 2018
தண்டோரா குழு
சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறையினர் சென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்குச் சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அதில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இவ்வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.
இதற்கிடையில், கடந்த வாரம் குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சென்னையில் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நேற்று மட்டும் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி சேலம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு சென்னை திரும்பினார். இதையடுத்து, பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் மட்டுமே நடந்ததாகவும், அப்போது ஆவணங்கள் எதுவும் இல்லாமல், அமைச்சர் விஜயபாஸ்கர் வெறுங்கையுடனே சென்றதாகவும் கூறப்படுகிறது. இரண்டு நாள் விசாரணைக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.