February 26, 2019
தண்டோரா குழு
காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தது.
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப் 14 ல் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற கான்வாயில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், இந்திய, பாக்., எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. பாலகோட், சக்கோத்தி, முஷாபாராபாத் ஆகிய 3 பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவீசி தகர்க்கப்பட்டன. இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை தாக்கியபோது அதனை முறியடிக்க பாகிஸ்தானின் F16 ரக போர்விமானம் வந்துள்ளது. இந்தியாவின் மிராஜ் 2000 ரக விமானங்கள் அதிகளவில் இருந்ததால் பாகிஸ்தான் விமானம் திரும்பிச்சென்றதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலை அடுத்து இருநாட்டு உயர்நிலை குழுவினர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்திய முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு தேச பற்றுடன் அனைத்து தரப்பினரும் பாராட்டி வீரர்களுக்கு சல்யூட் அடித்து வருகின்றனர்.