September 23, 2020
தண்டோரா குழு
மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
கொரொனா ஊரடங்கின் போது மத்திய அரசு, வங்கி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் கடன் தவணை தொகைகளை கட்ட கால அவகாசம் வழங்கியது. தமிழகம் முழுவதும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வாங்கிய கடனை கட்டச்சொல்லி மகளிர் சுய உதவிக்குழுவினரை ஆபாசமாக பேசியும், மிரட்டியும் வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மூன்று முறைக்கு மேல் மாதர் சங்கத்தின் சார்பாக மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் காலை மற்றும் இரவு வேளைகளில் கடன் வாங்கியவர்களின் வீட்டிற்கு வந்து மிரட்டுவது,தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டினர். இதற்கிடையே கோவையில் இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கடனை கட்டுவதற்கு 6 மாத காலம் அவகாசம் வழங்கக் கோரியும் கோரிக்கை விடுத்தனர்.