December 24, 2018
தண்டோரா குழு
கோவை தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் மனித யானை மோதலுக்கு காரணமான கனிம வள கடத்தல்களை தடுக்க கோரி, வனம் யானைகளின் வாழ்விடம் என்ற போஸ்டர்களுடன் வந்து சமூக நீதிக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்துவதாக விநாயகன், சின்னத்தம்பி என அழைக்கப்படும் இரண்டு காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். விநாயகன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டுள்ளனர். மேலும் சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், யானை – மனித மோதலுக்கு காரணமான சட்ட விரோதமாக கனிம வளக் கடத்தல்களை தடுக்க கோரியும், சமூக நீதிக்கட்சியினர் வனம் யானைகளின் வாழ்விடம் என்ற போஸ்டர்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். மேலும், கனிம வளக்கடத்தல்களால் யானைகளின் வாழ்விடமும், வலசை பாதையும் பாதிக்கப்படுவதாக கூறிய அக்கட்சியினர், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.