December 17, 2018
தண்டோரா குழு
முதல்வராக பதவியேற்றபின் கமல்நாத் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்து கோப்பில் கையெழுத்துவிட்டார்.
நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. இதற்கிடையில், மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, போபாலின் பெல் பகுதியில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், முதல்வராக பதவியேற்றபின் கமல்நாத் முதல் கையெழுத்தாக மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்து கோப்பில் கையெழுத்திட்டார். விவசாயிகள் கடன் தள்ளபடி செய்யப்படும் என தேர்தலின்போது கமல்நாத் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.