December 17, 2018
தண்டோரா குழு
மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்றுக்கொண்டார்.
5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து, மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போபாலின் பெல் பகுதியில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
72 வயதாகும் கமல்நாத் 9 முறை எம்.பி.யாகவும் மத்திய தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள இவர் இந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.