February 5, 2019 தண்டோரா குழு
மதுரை கள்ளழகர் கோயில் பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கள்ளழகர் கோயிலை கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில் மதுரை கள்ளழர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பல சொத்துக்கள் தனி நபர்களின் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, கோவில் சொத்துக்களை மீட்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் மேலும் கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும். இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகமும் சரிவர செய்து கொடுப்பதில்லை. கோவிலை சுற்றி நூற்றுக்கணக்கான மண்டகப்படிகள் உள்ளன. அதற்கு அதிகமான சொத்துக்களும் உள்ளன. எனவே அந்த சொத்துக்களை மீட்டால் கோவில் நிர்வாகமே தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். எனவே கோவில் சொத்துக்களை விரைவில் மீட்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மதுரை கள்ளழகர் கோவில் மற்றும் கோவிலைச் சேர்ந்த மலைப்பகுதியில் மது அருந்த தடை விதித்து உத்தரவிட்டனர். கோவில் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளனர். மேலும் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமாக எத்தனை மண்டகப்படிகள் உள்ளன? எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? அவற்றை நிர்வகிப்பது யார்? எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன? ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பிப்ரவரி 26-ம்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையும் பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.