February 19, 2019 தண்டோரா குழு
2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு அடுத்தமாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டணி அமைக்க ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி இன்று அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், அதிமுக – பா.ஜ., இடையே முதல் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த 14ம் தேதி சென்னையில் நடந்தது.
இதனைத்தொடர்ந்து அதிமுக – பாஜக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இன்று சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி, பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
பின்னர்,பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய ஓபிஎஸ்,
“அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வெற்றி கூட்டணி அமைத்துள்ளது. இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ஐந்து நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் 21 தொகுதிகளுக்கும் பாஜக முழு ஆதரவை வழங்குகிறது என கூறினார்.