March 8, 2019
தண்டோரா குழு
மகளிர் தினமான இன்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூலி தொழிலாளியின் மனைவிக்கு முதல் பிரசவத்திலேயே மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது பெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்- சிந்து தம்பதியருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு திருமணம் நடந்துள்ளது.இதையடுத்து கடந்த ஆண்டு கர்ப்பமடைந்த சிந்து கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு கால சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே ஸ்கேன் பரிசோதனையில் மூன்று குழந்தைகள் கருவில் வளர்வது தெரியவரவே அதற்கேற்றபடி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மகளிர் தினமான இன்று சிந்துவிற்கு மூன்று பெண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன.இரண்டு குழந்தைகள் 1.75 கிலோ எடையிலும் ஒரு குழந்தை 1.5 கிலோ எடையிலும் பிறந்துள்ளதாகவும் மூன்று குழந்தைகளும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அசோகன் தெரிவித்துள்ளார்.மேலும், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்று ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது இல்லை எனவும் சிக்கலான பல பிரசவங்கள் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.