December 29, 2018
தண்டோரா குழு
போக்சோ சட்டத்தில் திருந்தம் செய்து குழந்தைகளுக்கு பாலியல் தொலை அளித்தால் மரண தண்டனை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
18 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்களை உடனடியாக கைது செய்ய 2012ம் ஆண்டு போக்சோ சட்டத்தை கொண்டு வந்தனர். ஆனாலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் குறையவில்லை. இதனால் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவை குழு , பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளது.
இந்த கூட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் அளிக்க வகை செய்யும், ‘போக்சோ’ சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து காக்க கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தில் தண்டனையாக குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனையாக இருந்தது. தற்போது இதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இனி 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்க போக்சோவிலுள்ள 4,5,6 சட்ட பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.