March 14, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோவை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதைபோல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆணை பிறப்பித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணை நடவடிக்கையை தொடங்கினார்கள். சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிட்ட சில மணி நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நேற்று அதிரடியாக முடிவு செய்தது.
இதற்கிடையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோவை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சென்னை பழைய கமிஷனர் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது.