• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக வைரலாகும் கோவையை சேர்ந்த பெண்ணின் முகநூல் பதிவு !

March 12, 2019 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த இளம்பெண் நர்மதா மூர்த்தி. அவர் முகநூலில், தனது பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு, அதன் முக்கியத்துவம் கருதி சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, இப்பதிவு பதியப்பட்ட 16 மணி நேரங்களுக்குள்ளாகவே, 1,000-க்கும் மேற்பட்ட நபர்களால் பகிரப்பட்டுள்ளது.

இளம்பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், தனது தாயார் தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசியதை நர்மதா மூர்த்தி, உரையாடல் வடிவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவின் சாரம் இதுதான் :-

இந்த மோசமான நிகழ்வு தொடர்பான செய்தி வெளியானபோது, பாரம்பரியமான ‘கோயம்புத்தூர் குடும்பத்தைச்’ சேர்ந்த பெண்ணான எனக்கு என் குடும்பத்தாரிடம் இருந்து, “ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லாதே, அது பாதுகாப்பானது அல்ல” என்பது போன்ற வழக்கமான அறிவுரைகள் அடங்கிய போன் கால்கள் மட்டுமே வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவ்வாறு எண்ணிய என் எண்ணத்திற்கு மாறாக, என்னிடம் என் அம்மா பேசினார். அவர் கூறுகையில், “நீ வெளியில் தங்கி இருக்கிறாய். உன்னை ஒரு வலிமையான, உறுதியான பெண்ணாக வளர்த்துள்ளதாகவே நம்புகிறேன். எந்த நிலையிலும், உன் தந்தையும், நானும் உனக்கு பக்க பலமாய் இருப்போம். ஏதாவது இக்கட்டான சூழலில், யாரேனும் உனது படங்களையோ, வீடியோவையோ வைத்து மிரட்டல் விடுத்தால், எதற்கும் கவலைப்படாமல் ‘உன்னால் முடிந்ததை செய்துகொள்’ என கூறிவிடு. ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை! ஒருவேளை இதுபோன்ற ஏதேனும் பிரச்னையை வருமெனில் அதை எதிர்கொள்ள ஒரு பெற்றோராக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். ஆகையால், உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு, ” என்றார்.

என் அம்மா என்னிடம் இப்படி பேசிய போது, எனக்கு அவரை கட்டிக் கொண்டு அழவேண்டும் போல இருந்தது. இத்தகைய நம்பிக்கையும், பாதுகாப்புமே ஒரு குடும்பம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய விலைமதிப்பில்லாத ஒன்று. எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை தைரியமான பெண்ணாக இருங்கள். பெற்றோர்களே, உங்களுடைய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களின் ஆதரவைவிட அவர்களுக்கு வேறெதும் வலிமையாக இருந்துவிட முடியாது. இவ்வாறு நர்மதா மூர்த்தி தனது ஃபேஸ்புக் பதிவினை நிறைவு செய்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடுமைகள் தொடர்பான செய்திகள் பூதாகரமாகியுள்ள சூழலில், பெற்றோராக, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக நாம் அனைவரும் செய்ய வேண்டியது பாதிக்கப்பட்டவர்களுக்கு தோளோடு தோள் நிற்பதுதான் என்பது நர்மதா மூர்த்தி போன்ற இளம்பெண்களின் பதிவுகள் வாயிலாவது இச்சமூகம் உணரட்டும். மேலும், இந்த பிரச்னை குறித்து, பேசும் போது பெண்களை மட்டுமே, குற்றம் சாட்டி, அவர்களுக்கு உடை மற்றும் வாழ்வியல் குறித்த அறிவுரைகளை வழங்குவதை விடுத்து, இனியாவது ஆண்பிள்ளைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு தான் தற்போது, ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அவசியம் தேவை என்பது இது போன்ற பயங்கர சம்பங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் படிக்க