March 13, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான ஆபாச வீடியோ படங்கள் எடுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதைபோல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று ஆணை பிறப்பித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணை நடவடிக்கையை தொடங்கினார்கள். சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிட்ட சில மணி நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நேற்று அதிரடியாக முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படுகிறது.
மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ளது.
அதில்,பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தேவை. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.