March 25, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் புகார்தாரரின் அண்ணனை தாக்கிய மணிவண்ணன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் ஒருவர் அளித்திருந்தார்.இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட மூன்றுபேரை காவல்துறையினர் கைது செய்தனர் .இதனை அடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாய் இருந்தார்.
பின்னர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசையும் கைது செய்தனர். இதனிடையே புகார்தாரரின் அண்ணன் மீது பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் செந்தில் 33 ,பாபு 26 , வசந்தகுமார் 20 ,மணி என்ற மணிவண்ணன், பார் நாகராஜ் , ஆகியோர் மீது பொள்ளாச்சி போலீசார் 294 b, 323, 324 ,506 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தற்போது மணி என்ற மணிவண்ணன் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை நீதிபதி நாகராஜ் அவர்கள் வரும் 8 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.