April 10, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. எனினும் தற்போது வரை சிபிசிஐடி போலீசாரே இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில்,பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சீலிட்ட உறையில் உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேலும்,சிபிஐ விசாரிப்பது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கி பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணை தங்களுக்கு வரவில்லை என சிபிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய அரசாணையை மனுதாரர் தரப்புக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவ்வழக்கை நீதிமன்றம் ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.