March 16, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக திமுகவின் புறநகர் மாவட்டச் செயலாளர் மகனை பொய்யாக அவதூறு பரப்பி வரும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக வழக்கறிஞர் அணியினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பரவி வருகிறது. அதேபோல முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு உட்பட சிலருடன் திமுகவின் தெற்கு மாவட்டச் செயலாளரின் மகன் மணிமாறனுக்கு தொடர்பு இருப்பதாகவும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்களில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் எனவும் பொய்யாக திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவினர் திட்டமிட்டு செயல்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிமுக மாணவரணியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரை சார்ந்தவர்களை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பொள்ளாச்சி நகர திமுக மாணவரணியில் உறுப்பினராக உள்ள மணிமாறன் குறித்து முகநூல் பக்கத்தில் தவறான தகவல்களை வெளியிடுவது அவர்களின் குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், எனவே உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். பொள்ளாச்சி வழக்கை திசை திருப்ப அதிமுகவினர் இது போன்ற பொய்யான சித்தரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினர்.