March 11, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில்இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் டுவீட் செய்து வருகின்றனர். அதைபோல் இந்த வழக்கில் அரசியல் கட்சி தலையீடு இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசுகையில்,
பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதற்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகளிடம் இருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளது. மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை. தவறான தகவல்கள் பரபப்படுகிறது. இந்த விவகாரத்தில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் கொடூர குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட மொபைலில் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தன. புகார் அளித்தவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவரை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இவ்வழக்கில் 4 பேரை தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.