March 14, 2019
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதைபோல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆணை பிறப்பித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணை நடவடிக்கையை தொடங்கினார்கள்.
சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிட்ட சில மணி நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நேற்று அதிரடியாக முடிவு செய்தது.
இந்நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.