April 10, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் தெரிவித்த மாணவியின் அண்ணனை தாக்கியதால் கைதான மணிவண்ணன் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் சேர்க்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் சபரி ராஜன்,சதீஷ்,வசந்த் குமார், ஆகியோர் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் ஒருவர் அளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனிடையே புகார்தாரரின் அண்ணன் மீது பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் செந்தில் 33 ,பாபு 26 , வசந்தகுமார் 20 , ஆகியோர் மீது பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன் 28 கடந்த 25-ந் தேதி கோவை நீதி மன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவணணிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் மணிவண்ணனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடைபெற்றது.இந்நிலையில் மாணவியின் அண்ணனை தாக்கியதால் கைதான மணிவண்ணன் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் சேர்க்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5வது நபராக மணிவண்ணனை போலீசார் இணைத்துள்ளனர். ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இவ்வழக்கில் 5வது நபராக மணிவண்ணனை கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மணிவண்ணனை வரும் வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.