March 27, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பார் நாகராஜ் கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் ஒருவர் அளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மூன்றுபேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே புகார்தாரரின் அண்ணன் மீது பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் செந்தில் 33 ,பாபு 26 , வசந்தகுமார் 20 ,மணி என்ற மணிவண்ணன், பார் நாகராஜ் , ஆகியோர் மீது பொள்ளாச்சி போலீசார் 294 b, 323, 324 ,506 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு மாவட்ட போலீசாரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசின் வீடு, பண்ணை வீடு மற்றும் இதர குற்றவாளிகளின் வீடு என பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் சம்பந்தப்பட்ட பல நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பார் நாகராஜ் கோவை – அவினாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். இவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.