March 21, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரை நேரில் ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி,அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன்,சதீஷ்,வசந்த் குமார்,திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும்,திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆணை பிறப்பித்தார்.சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணை நடவடிக்கையை தொடங்கினார்கள்.சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிட்ட சில மணி நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசாணை வெளியிட்டிருந்த நிலையிலும்,இன்னும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படவில்லை.இதனால் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே,பொள்ளாச்சியை அடுத்த மாக்கினம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீடு,பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையின் போது, திருநாவுக்கரசர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல,சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் பலதரப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக காங்கிரசின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறப்படும் அந்த தினத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மயூரா ஜெய்குமாரை சந்திக்க சென்றதாக அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.அதன் அடிப்படையில் சிபிசிஐபி போலீசார் வரும் 25ம் தேதிக்குள் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கில் திமுக,அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் காங்கிரஸின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.