March 14, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதைபோல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆணை பிறப்பித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணை நடவடிக்கையை தொடங்கினார்கள். சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிட்ட சில மணி நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நேற்று அதிரடியாக முடிவு செய்தது.
இதனையடுத்து, சிபிஐ வழக்கை எடுக்கும்வரை சிபிசிஐடியே விசாரணை நடத்தும் எனவும் பெண் எஸ்பி நிஷா தலைமையில் விசாரணை நடக்கும் என்றும் அதை சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் கண்காணிப்பார் என்றும் கூறப்பட்டது.நேற்று சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், எஸ்பி நிஷா பார்த்திபன் உள்ளிடோர் நேரில் இறங்கி விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிபிசிஐடி சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
”பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பான விவரங்களையோ அல்லது இவ்வழக்கில் எதிரிகளால் பாதிக்கப்பட்ட தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறினால் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை வெளியில் கூறாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.
இவ்வழக்கு தொடர்பான படங்களோ அல்லது வீடியோக்களோ இருந்தால் தொலைபேசி மூலம் கீழ்கண்ட எண்ணில் உள்ள தொலைபேசி மூலம் அளிக்கலாம். தங்களுக்கு தெரிந்த விவரங்களை கடிதம் மூலமும் அளிக்கலாம்.
தங்களுக்கு தெரிந்த விவரங்களை நேரில் தெரிவிக்க விரும்பினால், எஸ்.பி அலுவலகம், சிபிசிஐடி காவல்துறை, அவினாசி சாலை, கோவை 18. என்கிற முகவரியில் நேரடியாக வந்து அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும்.
வழக்கின் முக்கியத்துவம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நலன் கருதி வழக்குக்குத் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்க சிபிசிஐடி போலீஸாரின் மெயில் ஐடி மற்றும் செல்போன் எண்ணையும் வெளியிட்டுள்ளனர். 9488442993 மெயில் ஐடி: [email protected]