March 13, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணை காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி.நிஷா பார்த்திபன் ஆகியோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி சரக துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் ஆகியோருடன் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில் ஆலோசணை மேற்கொண்டனர். தொடர்ந்து வழக்கின் கோப்புகள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் அங்கிருந்து புறப்பட்டனர்.பின்னர் சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர் கோவை காவலர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வழக்கு சிபிசிஐடி எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் விசாரிக்கப்படும். உதவியாக கோவை டி.எஸ்.பி. முத்துசாமி, கோவை ஆய்வாளர் சுமதி உட்பட 5 ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையினர் இன்று விசாரணையை துவக்கியுள்ளனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். கோவை காவல்துறை கொடுத்த அனைத்து ஆவணங்களை தனியாக குழு அமைத்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவை காவல்துறை கைது செய்தவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும். வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்படும். சிபிஐயிடம் வழக்கு சென்றால் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும். எந்தவித குழப்பமும் இல்லை. செல்போன் தடவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்பதால் தான் ஐ.ஜி. மட்டத்தில் உள்ள நான் வந்துள்ளேன். பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக இருக்கும். உண்மைக்கு தகுந்தவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.