March 11, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில்இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் பெரும் புள்ளிகள் மற்றும் அரசியல் தலையீடும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
” பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. தவறு செய்தார் என்றவுடனே கட்சியிலிருந்து ஒருவரை நீக்கியுள்ளோம்.என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேச தயாராக இருக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது எனக் கூறியுள்ளார்.