March 12, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில், இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமை செய்து ஏமாற்றிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், வகுப்புகளைப் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக அமர்ந்து மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய முற்பட்டனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.