March 11, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமுக வலைதளங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து தப்பித்த கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இது பொள்ளாச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை குறித்து பிரபலங்கைளின் கண்டன ட்விட் :
கரு. பழனியப்பன்
பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை.
ஜீ.வி.பிரகாஷ்குமார்
மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து.
நடிகர் சித்தார்த்
பொள்ளாச்சி சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்; அப்போதுதான் அவர்கள் தைரியமாக முன்வந்து குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியளிப்பார்கள்.