March 12, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில், இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தை கண்டித்து திமுக சார்பில் எம்பி. கனிமொழி தலைமையில் இன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கபட்டது. எனினும் தடையை மீறி கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள், மாதர் சங்க அமைப்புகள், காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் பங்குபெற்றன. இந்த போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் மேலும் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை தரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் விதிககளை மீறி இந்த போராட்டம் நடந்துள்ளதாக போலீசார் எம்பி கனிமொழி மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக நிர்வாகிகளை கைது செய்தனர்.