March 11, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமுக வலைதளங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து தப்பித்த கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இது பொள்ளாச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து புகர் அளித்த இளம் பெண்ணை மிரட்டி, தாக்கியதாக நாகராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நாகராஜ் அதிமுகவில் பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அவரை அடிப்படை உறுப்பினா் உள்பட கட்சியின் அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் விடுவிப்பதாக அதிமுக தலைமைக் கழக அறிவித்துள்ளது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணைஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.