March 11, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சியில் கல்லூரி – பள்ளி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய காமுகர்களின் பின்னணியில் ஆளுங்கட்சி உடந்தையா? ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமுக வலைதளங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து தப்பித்த கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இது பொள்ளாச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவரை தேடி வந்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆஜராக உள்ளதாகவும் திருநாவுக்கரசு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் திருப்பதியிலிருந்து கார் மூலம் பொள்ளாச்சி வந்த அவரை, மாக்கினாம்பட்டி என்ற இடத்தில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு அவர்களின் தகவல், புகார்களின் ரகசியம் காக்கப்பட்டு எதிரிகள் மீது பாரபட்சமின்றி சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கூறியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“பொள்ளாச்சியில் கல்லூரி – பள்ளி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய காமுகர்களின் பின்னணியில் ஆளுங்கட்சி உடந்தையா? இதனை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழித்த இந்தப் பிரச்னையில், குற்றவாளிகளை காப்பாற்றுவதில் ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது. நிச்சயம், திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட ரீதியிலும், மக்கள் மன்றத்திலும் போராட்டத்தை மேற்கொள்ளும் ” என பதிவிட்டுள்ளார்.