April 8, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரின் நீதிமன்ற காவலை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன்,சதீஷ்,வசந்த் குமார், மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும்,திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆணை பிறப்பித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணை நடவடிக்கையை தொடங்கினார்கள். சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிட்ட சில மணி நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசாணை வெளியிட்டிருந்த நிலையிலும், இன்னும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படவில்லை. இதனால் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பொள்ளாச்சியை அடுத்த மாக்கினம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீடு, மற்றும் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, திருநாவுக்கரசர் வீட்டில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல,சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் பலதரப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரின் நீதிமன்ற காவலை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.