March 1, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் செயல்படவில்லை எனவும், நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்குதண்டனை பெற்றுத்தர அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என பொள்ளாச்சி அதிமுக எம் பி மகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 24 ஆம் தேதியன்று கல்லூரி மாணவியை காதலிப்பதாக நடித்து, தனது நண்பர்கள் உதவியுடன் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அப்பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு , மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் செயல்படுவதாக, பொள்ளாச்சியில் செய்திகள் பரவின.
இந்நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி நாடாளுமன்ற எம் பி மகேந்திரன் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகராளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
பொள்ளாச்சி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்களை மிரட்டி அவர்களை அச்சுறுத்தி கொண்டு குற்றம் செய்பவர்கள்
சம்பந்தமாக இதுவரை புகார் அளிக்கவில்லை. தற்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரிடமிருந்து புகாரை பெற்று, காவல் துறை மூவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும் ஒரு குற்றவாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் புகார் கொடுத்த சகோதரர் மீது குற்றவாளிகளின் நண்பர்கள் நான்கு பேர் தாக்கியுள்ளனர். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆளுங்கட்சியினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக, பொள்ளச்சி பகுதியில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடூர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க காவல் துறை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்குதண்டனை வாங்கி கொடுக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்த குற்றத்தில் அதிமுக அரசியல் செய்யவில்லை எனவும், குற்றவாளிகள் பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள். அதில் ஒரு குற்றவாளி அதிமுகவைச் சார்ந்தவர் என தெரிவித்தார். யார் குற்றம் செய்தாலும் , அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தயங்காது என்றார்.
இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன்,
கடந்த 24 ஆம் தேதி பொள்ளாச்சி கல்லூரி மாணவி கிருத்திகா, சதீஷ், சபரீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேரால், மிரட்டி அச்சுறுத்தப்பட்டு, மனபங்கப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவர்களின் மீது வழக்குபதியப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை கண்டிபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் பூபாலன் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதால், குற்றவாளிகளின் நண்பர்கள் பூபாலனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், செல்போனையே முக்கிய ஆவணமாக எடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். பொள்ளாச்சி மக்களுக்கு உதவ காவல் துறை தயாராக இருப்பதாகவும், மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொள்ளாச்சியில் புகார் அளிக்க தயக்கமாக இருந்தால் தன்னை நேரில் சந்தித்து புகார் அளிக்கலாம் என்றார்.