March 6, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் யாரேனும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த கும்பலிடம் இருந்து தப்பித்த கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இது பொள்ளாச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவரை தேடி வந்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆஜராக உள்ளதாகவும் திருநாவுக்கரசு வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் திருப்பதியிலிருந்து கார் மூலம் பொள்ளாச்சி வந்த அவரை, மாக்கினாம்பட்டி என்ற இடத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து,இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு அவர்களின் தகவல், புகார்களின் ரகசியம் காக்கப்பட்டு எதிரிகள் மீது பாரபட்சமின்றி சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்தும்போது கவனமாக கையாள வேண்டும். மேலும் அடையாளம் தெரியாத நபர்களிடம் பழக வேண்டாம். தங்களுடைய புகைப்படங்களை முன் பின் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.