January 9, 2021
தண்டோரா குழு
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் வனத்துறை ஊழியரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் சிறுத்தை யானை காட்டுமாடு என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளது. அவ்வப்போது விலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும் உண்டு இதேபோல் கடந்த வாரம் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை ஒரு பெண்ணை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் பலியானார்.
இதையடுத்து வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் விலங்குகள் மற்றும் குடியிருப்புக்குள் வராமல் இருக்க முழு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று வால்பாறை ஸ்டான்மோர் பகுதியில் குடியிருப்புக்குள் காட்டு யானை புகுந்தது.யானையை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வந்தனர்.
அப்போது வனத்துறை ஊழியர் கோபி என்பவர் தனது கையை அசைத்து யானையிடம் பேசி அந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினார்.மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை வனத்துறை ஊழியர் கோபியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் யானையை மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.