June 21, 2018 தண்டோரா குழு
தமிழக மக்களிடம் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணா? பொய்.ராதாகிருஷ்ணா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளதாக முத்தரசன் விமர்சித்துள்ளார்.
கோவை ஜீவா இல்லத்தில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
“கோவை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை தனியார் (சியஸ்) நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை சிபிஐ வண்மையாக கண்டிக்கிறது.இதனை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 29ம் தேதி மாநில துணை செயலாளர் சுப்பராயன் தலைமையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.
சேலம் – சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவையற்றது எனவும், வளர்ச்சி என தமிழக அரசு கூறுவது ஏற்படையதல்ல என்றும் திட்டத்தை நிறைவேற்றியே தீர்வோம் என முதல்வர் அடம்பிடிப்பதாகவும் குற்றச்சாட்டினார்.பியூஸ்,வளர்மதி உள்ளிட்டோரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும்,கருத்து கூறினால் சமூக விரோதிகள் என கூறினால் நாங்களும் சமூக விரோதிகளே என கூறினார்.
மாநில அரசின் எட்டு வழி சாலையை கண்டித்து ஜுலை 4ம் தேதி சேலத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும்,தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி வரும் நிலையில் அரசு கைது நடவடிக்கை மூலம் அரசு பதற்றத்தை உருவாக்கி வருகிறது என சுட்டிக் காட்டினார்.
ஆளுநர் மூலமாக மத்திய அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருவதாகவும்,பல்வேறு அடக்குமுறைகள் மத்திய அரசின் உத்தரவின் பேரில் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஆதரவாகவே மாநில அரசு செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்,அதுவும் மத்திய அரசு கையில் தான் உள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் இன்னும் பதிவி விலகவில்லை என கேள்வி எழுப்பிய அவர்,
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கடிவாளம் இல்லாத குதிரை போன்று ஆகிவிட்டதாக தெரிவித்தார்.
அமைச்சர்கள் தங்களது வாய்க்கு வந்ததை அனைத்தும் பேசி வருகின்றனர்.காவிரி வேளாண்மை வாரியத்தை அமைத்தே விட்டதாக சாதனை கூட்டத்தை அதிமுகவினர் நடத்தி வருவது கேலி கூத்து என கூறினார்.
மேலும்,தமிழகத்தில் நக்சலைட்,மாவோயிஸ்ட் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அடிக்கடி கூறி வருகின்றார் எனவும்,உளவுத்துறை பார்க்கும் வேலையை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்க்கின்றார் என புகார் தெரிவித்தார்.பொன்.ராதா கிருஷ்ணனா? பொய்.ராதா கிருஷ்ணனா ? என்ற கேள்வி மக்களிடம் இருக்கின்றது.போகின்ற போக்கில் நக்சல், மாவோயிஸ்ட் என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லிவிட்டு போக கூடாது எனவும் யார் அவர்கள் என்பது குறித்த பட்டியலை பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்”.