September 6, 2018
தண்டோரா குழு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இதற்கடையில், முதல்வர் பழனிசாமி அமைச்சரவையைக் கூட்டி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலையில் உடனடி முடிவெடுக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், 15-வது நிதிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் நிதி தேவை குறித்து முழுமையாக எடுத்துக்கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.