September 19, 2019
தண்டோரா குழு
பெட்ரோல்,டீசலுக்கு மாற்றாக மாசு ஏற்படுத்தாமல் இயங்கும் இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் குமாரசாமி என்பவர் சுற்றுசூழலுக்கு உகந்த, மாசு ஏற்படுத்தாத பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக அதிநவீன சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் என்ஜின் எனப்படும் இருசக்கர வாகனம், கார், லாரி என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஏற்ற என்ஜினை கண்டுபிடித்துள்ளார். இதற்கு மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது.இந்த திட்டத்தை அடுத்த மாதம் ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், “இந்த திட்டத்தை எந்த நாட்டிலும் தொடரக்கூடாது, தொடர்ந்தால் கொலை செய்து விடுவதாக” கடந்த 14 ஆம் தேதி அதிகாலை வெள்ளக்கோவில் வீட்டிற்கு கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கடித்தத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை.இதுதொடர்பாக,சௌந்தரராஜன் குமாரசாமி மேற்கு மண்டல தலைவர் பெரியய்யா மற்றும், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.ஏற்கனவே, இந்த கண்டுபிடிப்பின் ஆரம்பக்கட்ட நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு, இதேபோல் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பெயரில் மிரட்டல் கடிதம் இவருக்கு வந்தது .அதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புக்கு புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.